×

பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: 4 கிலோ கஞ்சா பறிமுதல்..!

சென்னை: பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, G-2 பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (21.03.2023) அல்லிக்குளம், லிங்க் ரோட்டில் கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை செய்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவரை சோதனை செய்த  போது  கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன்பேரில், மேற்படி இடத்தில் கஞ்சா விற்பனை செய்த பிரதீப் கணேஷ் (எ) முகமது, வ/34, த/பெ.முருகேசன், எண்.16, சாந்தினி அவென்யூ, காவாங்கரை, புழல், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல D-5 மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (21.03.2023) மெரினா, நேதாஜி சிலை அருகில் கண்காணித்து அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தேபானந்த ராவத், வ/24, சாநந்தன் ராவத், ஓடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (21.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Periyamedu ,Marina , 2 persons were arrested for selling ganja in Periyamedu and Marina areas: 4 kg of ganja seized..!
× RELATED மெரினாவில் ₹7 கோடி செலவில் பாய்மர படகு...